தரம்சாலா: ராகிங்கில் கல்லூரி மாணவி பலி; கடும் நடவடிக்கை எடுப்போம் என முதல்-மந்திரி உறுதி
எங்களுடைய அரசு, இந்த விசயத்தில் தொடர்புடைய ஒவ்வொரு நபருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என முதல்-மந்திரி உறுதி கூறினார்.;
தரம்சாலா,
இமாசல பிரதேசத்தின் தரம்சாலா நகரில் அரசு கல்லூரி ஒன்று உள்ளது. இதில், 2-ம் ஆண்டு படித்து வந்த 19 வயது மாணவியை சக மாணவிகளே சேர்ந்து கடுமையாக ராகிங் செய்துள்ளனர். இதில், கடுமையாக பாதிக்கப்பட்டு லூதியானா நகரில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் கடந்த டிசம்பர் 26-ல் பலியானார்.
இதுபற்றி அவருடைய தந்தை அளித்த புகாரில், 3 மாணவிகள் அவரை தாக்கி, மிரட்டியதுடன், பேராசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இதனால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலையும் மோசமடைந்தது.
இதன்பின் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், அதில் பலனின்றி உயிரிழந்து விட்டார் என தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங் சுக்கூ இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, அந்த மாணவியின் வாக்குமூலம் அடிப்படையில் நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். அதன்படி உடனடியாக அந்த பேராசிரியரை சஸ்பெண்டு செய்து உள்ளேன்.
இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளேன். இந்த விசயத்தில் தொடர்புடைய ஒவ்வொரு நபருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கையை எங்களுடைய அரசு எடுக்கும் என கூறினார்.
இந்த விவகாரத்தில், பல்கலைக்கழக மானிய குழு தீவிர கவனம் கொண்டுள்ளது. தானாக முன்வந்து வழக்கு ஒன்றையும் பதிவு செய்தது. போலீஸ் விசாரணையும் நடந்து வருகிறது. இதேபோன்று உயர்கல்வியின் உண்மை கண்டறியும் குழுவும் அமைக்கப்பட்டு, அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள பேராசிரியர் அசோக் குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது செசன்ஸ் கோர்ட்டில் இன்று விசாரணை நடந்தது
அப்போது அவருக்கு ரூ.25 ஆயிரம் தனிநபருக்கான பிணை தொகையை செலுத்தும்படி உத்தரவிட்டு, இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கை, தேசிய மகளிர் ஆணையம் மற்றும் இமாசல பிரதேசத்தின் மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது.