தோட்டத்தில் தம்பதி வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.;
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் கட்னி மாவட்டம் பிஜாரா கிராமத்தை சேர்ந்தவர் லால் ராம் குஷ்வாலா (வயது 40). இவரது மனைவி பிரபா குஷ்வாலா (வயது 35). இந்த தம்பதி அருகே உள்ள சனிரா கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். அந்த தோட்டத்தில் உள்ள வீட்டில் இருவரும் தங்கி இருந்து வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், லார் ராம் அவரது மனைவி பிரபா தங்கி இருந்த தோட்டத்து வீட்டிற்குள் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர் நுழைந்துள்ளார். அங்கு உறங்கிக்கொண்டிருந்த 2 பேரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் தம்பதி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
இந்த இரட்டை கொலை குறித்து போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.