காங். மேலிடம் முடிவு செய்தால் கர்நாடக முதல்-மந்திரியாக தொடர்வேன்; சித்தராமையா

2023ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது.;

Update:2025-11-24 16:23 IST

பெங்களூரு,

2023ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது. அம்மாநில முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே இழுபறி நிலவியது. இதையடுத்து, முதல்-மந்திரி பதவியை ஆட்சிகாலத்தில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் கால இடைவெளியில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்-மந்திரியாக சித்தராமையா பதவியேற்றார்.

இதனிடையே, கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவியேற்று கடந்த 20ம் தேதி இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையடுத்து, ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி மாநில முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்-மந்திரி பதவியை யார் வகிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, டி.கே.சிவக்குமாரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 15க்கும் மேற்பட்டோர் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா இன்று சிக்கபள்ளாப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறுகையில், முதல்-மந்திரி பதவி தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். நான் முதல்-மந்திரியாக தொடரவேண்டுமென காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தால் அதன்படி முதல்-மந்திரியாக தொடர்வேன். அதேவேளை, காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன். டி.கே.சிவக்குமாரும் காங்கிரஸ் மேலிட முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்