ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்: டெல்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது
'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் பற்றி விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து இருந்தது.;
புதுடெல்லி,
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.இந்த தாக்குதலை தொடர்ந்து, மத்திய மந்திரிசபை கூட்டம் அவசரமாக கூடியது. பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
இந்திய படைகளின் ஏவுகணை தாக்குதல் பற்றி மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.பின்னர், பாதுகாப்புக்கான மந்திரிசபை குழு கூட்டமும் நடந்தது. மத்திய மந்திரிசபை கூட்டத்துக்கு முன்பாக, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர், பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு நிலவரம் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே, 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் பற்றி விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து இருந்தது. காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள கமிட்டி அறையில் இந்தக் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகவும், அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் எனத்தெரிகிறது.