‘பிரதமர் மோடியின் நண்பர்கள் இந்தியாவிற்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள்’ - மல்லிகார்ஜுன கார்கே
தூதரக உறவுகளில் ஏற்பட்ட தோல்வியே நமது நாட்டிற்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு காரணம் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.;
பாட்னா,
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது அமெரிக்க அரசு 25 சதவீதம் கூடுதல் வரியை அபராதமாக விதித்துள்ளது. இதன் மூலம் இந்தியா மீது அமெரிக்கா விதித்த மொத்த வரிகள் 50 சதவீதமாக உயர்ந்துள்ளன. அமெரிக்கா விதித்த வரி நியாயமற்றது என இந்தியா கூறியுள்ளது.
அதே சமயம், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு சீனாவும், இந்தியாவும் நிதி அளித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த வாரம், டிரம்ப் நிர்வாகம் H-1B விசாக்களை பெறுவதற்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவித்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் நண்பர்கள் இந்தியாவிற்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது;-
“சர்வதேச அளவில் நமது நாட்டிற்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் தூதரக உறவுகளில் ஏற்பட்ட தோல்வியே காரணம். பிரதமர் 'எனது நண்பர்கள்' என்று பெருமையாகக் கூறும் அதே நண்பர்கள்தான் இன்று இந்தியாவிற்கு ஏராளமான சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.