அவதூறு வழக்கு: ராகுல்காந்திக்கு நிபந்தனை ஜாமீன்

சாய்பாசாவில் நடந்த ஒரு பேரணியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா குறித்து ராகுல்காந்தி அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-08-06 14:16 IST

ராஞ்சி,

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு எதிரான அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜார்க்கண்டின் சாய்பாசாவில் உள்ள எம்பி-எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் நீதிமன்றம் கூறியது. ராஞ்சியில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் இருந்து ராகுல் காந்தி வந்தடைந்த நீதிமன்றத்திலும், அதைச் சுற்றியும் பாதுகாப்பு போடப்பட்டது.

ஜூன் 26ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஜூன் 2ஆம் தேதி ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் ராகுல்காந்தி மனுத் தாக்கல் செய்தார். ஜூன் 10ஆம் தேதி ராகுல்காந்தி நீதிமன்றம் குறிப்பிட்ட நாளில் ஆஜராக முடியாது என்று காங்கிரஸ் எம்பியின் வழக்கறிஞர் ஐகோர்ட்டில் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலாக ஆகஸ்ட் 6ஆம் தேதியை வழங்குமாறு கோரினார். ஐகோர்ட்டு அவரது கோரிக்கையை ஏற்றது.

2018 ஆம் ஆண்டு சாய்பாசாவில் நடந்த ஒரு பேரணியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக பிரதாப் குமார் என்பவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். சாய்பாசாவில் உள்ள கோர்ட்டில் குமார் தாக்கல் செய்த மனுவில், ராகுல் காந்தியின் அறிக்கைகள் அவதூறானவை என்றும் அமித்ஷாவின் அந்தஸ்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே கூறப்பட்டவை என்றும் குற்றம் சாட்டினார்.

முன்னதாக, மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரான காந்தி, மூத்த பழங்குடியினத் தலைவரும் முன்னாள் முதல்வருமான சிபு சோரனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள செவ்வாய்க்கிழமை ஜார்க்கண்ட் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்