காங்கிரஸ் பயிற்சி முகாமிற்கு தாமதமாக வந்த ராகுல் காந்திக்கு தண்டனை
காங்கிரஸ் பயிற்சி முகாமுக்கு தாமதமாக வருகைதந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டது.;
போபால்,
மத்திய பிரதேச மாநிலம், பச்மார்ஹியில் நேற்று காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது..இந்த பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தி கலந்துகொண்டார். ஆனால், இந்த பயிற்சி முகாமிற்கு ராகுல் காந்தி தாமதமாக வந்தார்.
அதாவது,பீகார் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு நேரடியாக வந்ததால் இரண்டு நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பயிற்சி முகாமுக்கு தாமதமாக வருபவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் பயிற்சிப் பிரிவின் தலைவர் சச்சின் ராவ், 10 புஸ்-அப்ஸ் எடுக்க வேண்டும் என்ற தண்டனை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்த ராகுல் காந்தியும் அனைவரின் முன்னிலையில் 10 புஸ்-அப்ஸ் தண்டனையை செய்தார்.இதுதொடர்பாக ம.பி. காங்கிரஸில் செய்தித் தொடர்பாளர் அபினவ் பரோலியா அளித்த பேட்டியில், “ராகுல் காந்தி இதைச் செய்வது ஒன்றும் புதிதல்ல, எங்கள் முகாமில் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறோம். கட்சியில் அனைவரையும் சமமாக நடத்தும் ஜனநாயகம் உள்ளது. பா.ஜனதா போல் எங்கள் கட்சியில் முதலாளித்துவம் கிடையாது” என்றார்.