பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு சம்பவம்
இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
சிம்லா,
இமாச்சலபிரதேச தலைநகர் சிம்லாவில் பல்வேறு தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்நிலையில், சிம்லா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிகள் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் பள்ளிகளில் தீவிர சோதனை நடத்தினர். மேலும், வெடிகுண்டு மிரட்டல் குறித்து அறிந்த மாணவ, மாணவியரின் பெற்றோர் விரைந்து வந்து தங்கள் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
அதேவேளை, பள்ளிகளில் தீவிர சோதனை நடைபெற்ற நிலையில் சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.