நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ல் தொடக்கம் - மத்திய அரசு அறிவிப்பு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல்முறையாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது.;
புதுடெல்லி,
ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது வழக்கம். ஆண்டு துவக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும். இதில், ஜனாதிபதி உரை, பட்ஜெட் தாக்கல், நிறைவேற்றம், மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், நிதி மசோதா உள்ளிட்டவை இடம்பெறும்.
அடுத்ததாக மழைக்கால கூட்டத்தொடர், மூன்றாவதாக குளிர்கால கூட்டத்தொடர். இந்த கூட்டத்தொடர்கள் இரண்டிலுமே பெரும்பாலும் மசோதாக்கள் நிறைவேற்றம் உள்ளிட்ட அரசு அலுவல்களே பிரதானமாக இடம்பெறும்.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை இந்த மாதமே கூட்டும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தநிலையில் மத்திய மந்திரியின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடைபெற்று, ஏப்ரல் 4ஆம் தேதியுடன் 2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நிறைவு பெற்றது. இதனால் 2025 ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.