இங்கிலாந்து போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்
இங்கிலாந்தின் எப்-35 போர் விமானம் நேற்று இரவு திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.;
image courtesy: HMS Prince of Wales via ANI
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில், இங்கிலாந்து போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் குறைவாக இருந்ததால் இங்கிலாந்தின் எப்-35 போர் விமானம் நேற்று இரவு அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானம் தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்ட அந்த போர் விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதாக தெரிவித்த விமானி, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்டார். இதையடுத்து விமானம் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதி செய்வதற்காக விமான நிலைய அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்தனர்.
பின்னர் அந்த போர் விமானம் நேற்று இரவு 9.30 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது. தற்போது அந்த விமானம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.