உலக வரைபடத்தில் இருந்து அழித்து விடுவோம்: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது.;

Update:2025-10-04 05:35 IST

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் அனூப்கார் பகுதியில் ராணுவ நிலையில், இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவிவேதி பேசினார். அப்போது அவர், பாகிஸ்தான் பயங்கரவாத ஏற்றுமதியை நிறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆபரேசன் சிந்தூர் 2-ம் பாகம் வெகு தொலைவில் இல்லை.

இந்த முறை இந்திய படைகள் எந்த கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ளாது. பாகிஸ்தான் உலக வரைபடத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று விரும்பினால், பயங்கரவாத ஊக்குவிப்பை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார். கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும் என்றும் கூறினார். இதனால், 2-வது முறையாக ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட கூடும் என சூசகத்துடன் கூறியுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது.

இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவை தரைமட்டம் ஆக்கப்பட்டன.

இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன.

Tags:    

மேலும் செய்திகள்