‘ரீல்ஸ்’ மோகத்தால் ரெயில் வரும் போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்
நெட்டிசன்கள் வாலிபரின் செயலை கண்டித்து பதிவிட்டு வருகிறார்கள்.;
சமூக வலைதளங்களில் புகழ் பெற வேண்டும் என்பதற்காக வாலிபர்கள் விபரீத சாகசங்களை செய்யும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் சில வீடியோக்கள் அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்து விடுகிறது. இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில் வாலிபர் ஒருவர் ‘ரீல்ஸ்’ மோகத்தால் ரெயில் வரும் போது தண்டவாளத்தில் படுத்து எழுந்த காட்சிகள் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் ரெயில் பாதையில் படுக்கிறார். ரெயில் அவரை கடந்து சென்றதும் அந்த வாலிபர் மகிழ்ச்சியுடன் எழுந்து குதிப்பது போன்று காட்சிகள் உள்ளது. வைரலான இந்த வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில் நெட்டிசன்கள் வாலிபரின் செயலை கண்டித்து பதிவிட்டனர். ரீல்ஸ் கலாச்சாரம் நாட்டின் நலனை அழிக்கிறது. இதுபோன்ற முட்டாள்தனமான செயல்கள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது என பலரும் பதிவிட்டனர்.