15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - சித்தப்பா உள்பட 2 பேர் கைது

ஊட்டியில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பா உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2025-03-04 09:21 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 15 வயது சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால் அவர் தனது தாயார் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார். அந்த சிறுமி ஊட்டியில் ஒரு பள்ளியில் படித்து வருகிறார். அடுத்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு சிறுமி எழுத வேண்டும். எனவே நன்றாக படிக்க வேண்டும் என உறவினர்கள் கூறினர்.

இதனால் மனவருத்தம் அடைந்த சிறுமி, கடந்த ஜனவரி 24-ந் தேதி தனது சித்தி வீட்டுக்கு சென்று சில நாட்கள் தங்கினார். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அவருடைய சித்தப்பா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி, யாரிடமும் கூறவில்லை என்று தெரிகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 14 -ந் தேதி 15 வயது சிறுமி பாட்டி ஊருக்கு திருவிழாவுக்கு சென்றார். அங்கு சிறுமியை, ஏற்கனவே திருமணமான 25 வயது வாலிபர் சந்தித்தார். அவர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் கூறக்கூடாது என்று மிரட்டியதாக தெரிகிறது. மேலும் அந்த சிறுமியை, பக்கத்து வீட்டை சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன்னுடன் படிக்கும் தோழிகளிடம் கூறி அழுதுள்ளார். உடனே தோழிகள் ஆசிரியர் மூலம் 1098 என்ற சைல்டு லைன் எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். அதன் பேரில் ஊட்டி ஊரக போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் குமார், இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சித்தப்பா மற்றும் 25 வயது வாலிபர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய 85 வயது முதியவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். தற்போது அவர் படுத்த படுக்கையாக உள்ளார். எனவே கைது செய்ததும் அவர் இறந்து விட்டால் சிக்கல் ஏதும் வருமா என போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்