தூத்துக்குடியில் மின்னல் தாக்கி 4 பேர் காயம்

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த 4 பேர் கோவளம் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றனர்.;

Update:2025-10-05 21:31 IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், சாத்தான்குளம், திருச்செந்தூர், ஆத்தூர், ஏரல், முக்காணி, முள்ளக்காடு, முத்தையாபுரம், ஓட்டப்பிடாரம், மணியாச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆத்தூர் பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது.

இந்த நிலையில் முள்ளக்காடு, ராஜுவ்நகர் 2வது தெருவைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் தங்கமுத்து (வயது 18), பொன்முத்து மகன் அன்பரசன்(18), பொன்செல்வம் மகன் ஆனந்தகிருஷ்ணன்(17), ஜான்பால் மகன் பிரின்ஸ்(17) ஆகிய 4 பேரும் முள்ளக்காடு, கோவளம் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றனர்.

கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென மின்னல் தாக்கியதில் அவர்கள் 4 பேரும் காயம் அடைந்தனர். அப்போது அருகில் கடலில் குளித்து கொண்டிருந்தவர்கள் அந்த 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணிதர்மராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்