காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 42-வது கூட்டம் - டெல்லியில் நடைபெற்றது

மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதன் முழு கொள்ளளவான 93.470 டி.எம்.சி ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-30 19:26 IST

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 42-வது கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசு செயலாளர், நீர்வளத்துறை ஜெ.ஜெயகாந்தன், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தற்பொழுது (30.07.2025) மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதன் முழு கொள்ளளவான 93.470 டி.எம்.சி ஆக உள்ளது எனவும், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து அதிகமான உபரிநீர் வெளியேற்றப்படுவதினால் மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 1,12,555 கன அடியாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது என்றும், ஆகையால் நிலைமைக்கு ஏற்ப மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதினாலும், தமிழகத்திற்கு 2025, ஆகஸ்டு மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 45.95 டி.எம்.சி. நீர் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் ஆணையத்தை வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் காவிரி தொழில் நுட்பக் குழுமத்தின் தலைவர் ரா.சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்