தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.;
சென்னை,
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-ந்தேதி கடைசி நாள்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அவர்கள் நேரில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்தசூழலில் எஸ்.ஐ.ஆர் பட்டியலில் நடைபெறும் குளறுபடிகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக 234 தொகுதிகளுக்கும் கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 5 - 20 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்தவர்கள், புதிய வாக்காளர்கள், முழுமையான தகவல் தராதவர்கள் என பல லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.