விக்கிரமசிங்கபுரம் அருகே மீண்டும் கரடி நடமாட்டம்: முதியவரை தாக்கியதால் பரபரப்பு
கரடியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.;
நெல்லை,
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பாபநாசம் மற்றும் அதை சுற்றியுள்ள அனவன்குடியிருப்பு, விக்கிரமசிங்கபுரம், தட்டான்பட்டி, கோட்டைவிளைப்பட்டி உள்ளிட்ட மலை அடிவார கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாகவே இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
விக்கிரமசிங்கபுரம் அருகே கொண்டபையன்பட்டி பகுதியைச் சேர்ந்த கணபதி (வயது 66) என்ற முதியவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் வழக்கம்போல் முதலியார்பட்டி டீக்கடைக்குச் நடந்து சென்றுள்ளார். அங்கு டீ அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
தாட்டான்பட்டி மெயின்ரோடு பகுதியில் சென்றபோது, சாலையில் உலா வந்த கரடி திடீரென்று கணபதியை நோக்கி ஓடி வந்து அவரை தாக்கியது. கரடியிடம் இருந்து தப்பிப்பதற்காக கணபதி கூச்சலிட்டவாறு அதனுடன் கட்டிப்புரண்டார். ஒருவழியாக கரடியிடம் இருந்து தப்பித்த அவர் தலைதெறிக்க ஓடி வந்தார். அப்போது அவரது பின்னால் மற்றொரு கரடியும் நின்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
காயமடைந்த கணபதி அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறையினர் கூண்டு வைத்து அதனை பிடித்து சென்று அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.