போலீஸ் ஏட்டு தாக்கியதாக புகார்: 4 சிறுவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை கொடுங்கையூரில் திருட்டு வழக்கில் கைது செய்த 4 சிறுவர்களை போலீஸ் ஏட்டாக பணியாற்றியவர் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.;
கடந்த 2016-ம் ஆண்டு திருட்டு வழக்கில் 4 சிறுவர்களை கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிய குணசேகரன் (தற்போது இவர், கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்) சிறுவர்களை துன்புறுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்கை விசாரித்தது.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். வழக்கை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன், மருத்துவ ஆவணங்களை பார்க்கும்போது சிறுவர்கள் தாக்கப்பட்டது தெரிகிறது. சிறுவர்களும், குணசேகரன் தங்களை தாக்கியது குறித்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர். சிறுவர்கள் விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்திருப்பது தெரிகிறது. எனவே, ‘தமிழக அரசு 4 சிறுவர்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையைச் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம்' என உத்தரவிட்டார்.