கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 2 வாலிபர்கள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.;
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியில் கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம், தருவையை சேர்ந்த தளவாய்(எ) முருகன் மகன் முத்து (வயது 24) மற்றும் செல்லகண்ணு மகன் மந்திரி(எ) ராஜ்(25) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் கொலை மிரட்டல், திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சேரன்மகாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் கவனத்திற்கு வந்ததது.
இதனையடுத்து அவர், மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், மேற்சொன்ன 2 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.