சிவன் கோவிலுக்குள் புகுந்து எண்ணெய் பாட்டிலை தூக்கி சென்ற கரடி
பகல் நேரத்தில் கோவிலுக்குள் கரடி வந்து செல்வதால், கோவிலுக்கு செல்ல அச்சமாக உள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.;
ஊட்டி,
ஊட்டி நகரில் கரடிகள் உலா வருகின்றன. இந்தநிலையில் ஊட்டி எல்க்ஹில் பகுதியில் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவில் சன்னதிக்குள் கரடி புகுந்தது. பின்னர் மெதுவாக படி ஏறி கோவிலுக்குள் சென்று, விளக்கு ஏற்ற வைக்கப்பட்டு இருந்த எண்ணெய் பாட்டிலை கரடி வாயில் கவ்வியவாறு தூக்கி கொண்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்த காட்சியை சிலர் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பகலில் கரடி கோவிலுக்குள் புகுந்ததால், பக்தர்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வனப்பகுதியில் இருந்து கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் தற்போது சர்வ சாதாரணமாக ஊருக்குள் வருகின்றன. பகல் நேரத்தில் கோவிலுக்குள் கரடி வந்து செல்வதால், கோவிலுக்கு செல்ல அச்சமாக உள்ளது. எனவே, வனத்துறையினர் மீண்டும் கூண்டு வைத்து கரடியை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.