அதிமுகவை பலவீனமாக்கி வருகிறது பாஜக: தூத்துக்குடியில் தமிமுன் அன்சாரி பேட்டி
திராவிட கட்சிகளை அழித்தால் தான் தங்களது எதிர் கால அரசியல் இருப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் பாஜக இருக்கிறது என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கூறினார்.;
தூத்துக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
தமிழக முதல்-அமைச்சர் தமிழ்நாட்டு நலனை மேம்படுத்த வெளிநாடு சுற்று பயணங்களை மேற்கொண்டு, முதலீடுகளை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என நாங்கள் நம்புகிறோம்.
முக்கியமாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாருக்கு மரியாதை செய்ததோடு, பெரியாருடைய பேரனாக வந்திருப்பதாக பேசியது தமிழ்நாட்டு மக்களால் பெரிய வரவேற்புக்குள்ளாகி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் பாராட்டுகிறார்கள்; சென்ற இடங்களில் எல்லாம் சமூக நீதியும் பெரியார் அவர்களுடைய சிறப்புகளையும் முன் எடுக்க முடியும் என செயல்பட்டு வரக்கூடிய முதல்-அமைச்சருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவின் மீது அமெரிக்க அரசின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி வணிகமும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. ஏற்கெனவே 13 சதவீதம் வரிகளை அமெரிக்கா கூட்டிய நேரத்தில் கூடுதலாக 50 சதவீதம் வரையும் சேர்த்து 63 சதவீத வரி விதிப்பை சமாளிக்க முடியாமல் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எல்லாத்தையும் பொருத்தவரை திருப்பூர், ஆம்பூர், கருர் பெருநகரங்களில் நம்முடைய உற்பத்திகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
1,500 கோடி முதல் 2,000 கோடி ரூபாய் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான சூழல் இல்லாமல் பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த பாதிப்பை சரி செய்யக்கூடிய வகையில் மத்திய பாஜக கூட்டணி அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். புதிய நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி புதிய சந்தைகளை திறக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதனால் வேலை இழக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு அடுத்த ஓராண்டு காலத்திற்குள் உதவி தொகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அமெரிக்க அதிபர் டிரம்புடைய இந்த மோசமான நடவடிக்கையினால் ஏற்பட்ட இந்த அனுபவத்தை மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டு பிரிக்ஸ் நாடுகளுடைய கூட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும். அமெரிக்கா நம்பகமான நாடு, விசுவாசமான நாடு அல்ல. நம்முடைய சமீபத்திய பாகிஸ்தான் போரில் கூட வெளிப்படையாகவே அமெரிக்கா பாகிஸ்தான் ஆதரவை கையில் எடுத்தது. அவர்கள் பாகிஸ்தான் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதை நாம் அறிகிறோம். இந்த நேரத்தில் நம்முடைய நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும். அமெரிக்காவின் டாலர் சர்வாதிகாரத்தை நாம் வீழ்த்த வேண்டும்.
அதிமுக ஒன்றிணைவது குறித்த கேள்விக்கு, கழகம் இல்லாத தமிழ்நாடு, திராவிட கட்சிகளை அழித்தால் தான் தங்களது எதிர் கால அரசியல் இருப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் பாஜக இருக்கிறது. அதன் முதல் நிலைப்பாடு அதிமுக. ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவை தொட கூட முடியவில்லை. அவர் இறந்த பின்பு அதிமுகவின் தற்போது இருக்கக்கூடிய தலைமைத்துவ பலவீனத்தை பயன்படுத்தி கொண்டு கட்சியை சின்னாபின்னம் ஆக்கக்கூடிய எல்லா வேலையும் பாஜக செய்து வருகிறது.
அந்த கட்சியை தங்கள் தேவைக்காக பலவீனப்படுத்துகிறார்கள்; தலைவர்களை பிரிக்கிறார்கள். தங்கள் தேவைக்காக ஒன்று சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் உயர்த்தி செய்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ஒரு சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அது பாரதிய ஜனதாவிற்கு பிடிக்கவில்லை. அவர் அதிமுகவில் பலம் பெறுவதை பொறுத்துக் கொள்ளாமல் தங்களது பேரத்திற்கு பணிய மாட்டார்கள் என அச்சுறுத்தலிலும் பலவீனத்திலும் வைத்திருக்க வேண்டும் என செங்கோட்டையனை கையில் எடுத்திருப்பதாக கருதுகிறோம்.
நாம் இருக்கக்கூடிய இந்தியா கூட்டணி திமுக ஆட்சியில் இருக்க வேண்டும்; எதிர்கட்சியாக அதிமுக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அப்படி இருக்கும்போது ஒரு திராவிட கட்சி அழிவது, பலவீனப்படுவதை யாரும் விரும்பவில்லை என்பதை அதிமுகவின் தலைமையும், நிர்வாகிகளும் உணர வேண்டும். தொண்டர்களிடம் அந்த கருத்து இருக்கிறது. கட்சியை பலகீனப்படுத்தியது, குழப்பத்தை ஏற்படுத்தியது யார் என்று அனைவருக்கும் தெரியும்.
இது அதிமுக தலைமை உணர்ந்து கொண்டு புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். எங்கெல்லாம் பாஜக கூட்டணி வைத்திருக்கிறது; அங்கே எல்லாம் கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிராவில் கொள்கை பங்காளியான சிவசேனாவை பின்னுக்கு தள்ளியது. நிதிஷ்குமார் நிலை பலவீனமாகிவிட்டது, ஒடிசாவில் நவீன்பட்நாயக் பலவீனமாகிவிட்டார். அதேபோல் தான் அதிமுகவும் இருக்கிறது. கடந்த 7, 8 ஆண்டுகளாக பாஜகவின் நாடகம் தான் சசிகலா மீது வழக்கு போட்டது. நாடு பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் தான் இந்த ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது; இதை வரவேற்கிறோம்.
நேற்று டிஜிபி அலுவலகம் முன்பு நடந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. காவல்துறை தலைமை அலுவலகம்; அதன் வாசலிலேயே இப்படிப்பட்ட மோதல் நடப்பதை ஏற்க முடியாது. காவல்துறை தலைவர் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உளவுத்துறையும் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். மக்களுடைய உச்சபட்ச நம்பிக்கை என்பது அந்த காவல்துறை அலுவலகம். அதன் வாயிலில் இப்படி நடப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது அரசுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும். அதனால் காவல்துறை இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.