வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் உயிரிழப்பு
சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்துகொண்டிருந்தபோது, 3-வது மலையில் மயக்கம் ஏற்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
கோவை,
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. நேற்று சித்ரா பவுர்ணமியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்தனர்.
இந்த நிலையில், விஸ்வா என்ற 15 வயது சிறுவன், தனது தந்தையுடன் வெள்ளியங்கிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்துகொண்டிருந்தபோது, 3-வது மலையில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக டோலி கட்டி சிறுவன் அடிவாரத்துக்கு கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளோர் வெள்ளியங்கிரி மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவனுக்கு ஏற்கெனவே ஏதேனும் உடல்நல பாதிப்புகள் இருந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன், மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.