இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது ‘சென்னை உலா’ பேருந்து சேவை
‘சென்னை உலா' சிறப்பு சுற்று வட்ட பேருந்து சேவை இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.;
சென்னை,
உலக அளவில் லண்டனுக்கு அடுத்தபடியாக 2-வது பழமையான மாநகராட்சி என்ற பெருமை சென்னை மாநகராட்சிக்கு உண்டு. இங்குள்ள பாரம்பரிய கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், சென்னை வரும் சுற்றுலா பயணிகள், பாரம்பரிய கட்டிடங்களை சுற்றி பார்க்க சென்னை உலா சுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இந்த புதிய சேவையை கடந்த 14-ம் தேதி தொடங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை காண விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும், மற்ற நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் சென்னை உலா சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக மொத்தம் 5 பேருந்துகள், ஆரம்ப காலத்தில் ஓடிய பேருந்துகள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் வீதம் பஸ் நிலையங்களுக்கு வரும். அதில் ரூ.50 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று பயணிக்கலாம்.
சென்டிரல் ரெயில் நிலையம் முதல் சென்னை பல்லவன் இல்லம் வரை 16 வழித்தடங்களில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.