மா விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: எல்.முருகன் விமர்சனம்

மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக மக்கள் தேர்வு செய்தது எதற்காக? என்று எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.;

Update:2025-10-15 17:58 IST

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஆட்சிக்காலம் முழுவதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் தனது தந்தையான முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறப்பது, சாலைகளுக்கும் தெருக்களுக்கும் தனது தந்தை பெயரை சூட்டுவது என்று கட்சியினருடன் சேர்ந்து விளம்பர அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

மாம்பழ விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கக்கோரி, சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு தான் கடிதம் எழுதியதாகவும், தற்போது மீண்டும் கடிதம் எழுதுவதாகவும் கூறியிருக்கிறார். தமிழக மா விவசாயிகள் விஷயத்தில் திமுக அரசு செய்து வருவது வெற்று நாடகம் மட்டுமே. திமுக அரசின் செயலற்ற தன்மையால் தமிழகத்தில் மா விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

கர்நாடகா, ஆந்திரா உட்பட மற்ற பல மாநிலங்களில் மாம்பழ கூழ் தயாரிக்கும் ஆலைகள் அதிகஅளவில் உள்ளன. இவற்றிக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. மற்ற மாநில அரசுகள், மத்திய அரசுடன் இணைந்து மாம்பழம் சார்ந்த தொழில்களை விரிவுபடுத்தி வருகின்றன. தமிழக மா விவசாயிகளும் கூட மற்ற மாநில மாம்பழ கூழ் ஆலைகளை நம்பி இருக்க வேண்டிய அவல நிலை தான் உள்ளது.

தமிழகத்தில் மாம்பழம் சார்ந்த தொழில்களை தொடங்க திட்டமிட வேண்டியது யார்? குளிர்ப்பதன கிடங்கு அமைக்க வேண்டியது யார்? குளிர்பான நிறுவனங்களை அழைத்து பேச வேண்டியது யார்?. ஆட்சிக்காலம் முழுவதும் எதுவும் செய்யாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக கூறி முதல்-அமைச்சர் நீலிக்கண்ணீர் வடிப்பது நாடகமே. மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக மக்கள் தேர்வு செய்தது எதற்காக?. தமிழகத்தில் எந்தப் பிரச்சினை என்றாலும் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்க முயல்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்