கோவை அவிநாசி மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.;

Update:2025-10-07 13:17 IST

சென்னை,

கோவை மக்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த அவிநாசி சாலை புதிய மேம்பாலம் வரும் நாளை மறுநாள் ( 9-ம் தேதி) திறக்கப்பட உள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில் கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5 சதவீதம் பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவிநாசி மேம்பாலத்தை, நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95 சதவீத பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.

கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால'த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.

கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடு அவர்களின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Tags:    

மேலும் செய்திகள்