கோவில் திருவிழாவில் பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு
கோவில் திருவிழாவில் பூக்குழியில் இறங்கியபோது தவறி விழுந்த பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இருபதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த நிலையில் முத்துக்குமார் என்ற பக்தர் பூக்குழியில் இறங்கி நடந்து சென்றபோது கால் தடுமாறி விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் முத்துக்குமார் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.