தசரா கொடியேற்றம்: குலசேகரன்பட்டினத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. நேரில் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், குலசேகரன்பட்டினத்தில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்க உத்தரவிட்டு போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.;
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி முக்கிய நிகழ்வான சூரசம்காரம் 2.10.2025 அன்றும் மற்றும் கொடியிறக்கம் மற்றும் காப்புதரித்தல் நிகழ்வு 3.10.2025 அன்றும் நடைபெற்று திருவிழா நிறைவுபெறும்.
தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு லட்சகணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனத்திற்கு வருவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இன்று குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வளாகம், வாகனம் நிறுத்துமிடம், கோவிலுக்கு செல்லும் வழித்தடங்கள், சூரசம்காரம் நடைபெறும் இடம், தசரா குழுவினரின் வழித்தடம், பக்தர்களின் தரிசன பாதை உட்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் அவர் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வழித்தடங்கள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகளில் அதுகுறித்து அறிவிப்பு பலகைகள் வைக்கவும் உத்தரவிட்டு அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. தீபு, திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமார், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபுபாஸ்கர் உள்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.