திருமாவளவனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தேர்தல் விதியை மீறி, 4 நிமிடங்கள் கூடுதலாக பிரசாரம் செய்ததாக திருமாவளவனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
கோப்புப்படம்
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக அரியலூர் மாவட்டம் இலந்தைக்கூடத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இரவு 10 மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும். ஆனால், தேர்தல் விதியை மீறி, 4 நிமிடங்கள் கூடுதலாக பிரசாரம் செய்ததாக திருமாவளவனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, திருமாவளவன் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்டு அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.