‘திராவிட மாடல் அரசை வீட்டிற்கு அனுப்ப தேசிய ஜனநாயக கூட்டணியில் எல்லோரும் இணைய வேண்டும்’ - நயினார் நாகேந்திரன்
எல்லோரும் சேர்ந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும் என நயினார் நாகேந்திரன் சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.;
மதுரை,
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்ற பெயரில் மதுரையில் இருந்து இன்று முதல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இதனை முன்னிட்டு மதுரையில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. கட்சிக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“இந்த சுற்றுப்பயணத்தின் நோக்கம் திராவிட மாடல் அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால், மக்கள் விரோத அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால் எல்லோரும் எங்கள் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். எல்லோரும் என்று சொன்னால் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். எல்லோரும் சேர்ந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார். த.வெ.க. தலைவர் விஜய்யை குறிப்பிட்டு நயினார் நாகேந்திரன் இவ்வாறு மறைமுகமாக பேசியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.