டிப்பர் லாரி மோதி தந்தை - மகன் பலி

தந்தை மற்றும் மகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-06-13 21:31 IST

கோவை,

கோவை மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த ராஜேஷ் (36) இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய 10 வயது மகனான வினீத்தை காளப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளியில் சேர்த்துள்ளார். ராஜேஷ் தினமும் பயிற்சிக்காக மகனை அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை தனது மகனை பயிற்சிக்காக அழைத்து வந்துள்ளார். அப்போது சரவணம்பட்டி அருகே வந்துகொண்டு இருக்கும் போது பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ராஜேஷின் ஆக்டிவா வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தந்தை மற்றும் மகன் மீது டிப்பர் லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே இருவரும் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அங்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து காட்டூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் டிப்பர் லாரியை ஒட்டி வந்த மனோகர் என்பவரை கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மகனை ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது விபத்து ஏற்பட்டு இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்