மயக்க மருந்து கொடுத்து சிறுமி பலாத்காரம்: போக்சோவில் தொழிலாளி கைது

13 வயது சிறுமிக்கு தேநீரில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-09-20 09:47 IST

திருப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12-ந்தேதி சிறுமியின் பெற்றோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த சிறுமியின் தந்தை வீட்டை விட்டு சென்று விட்டார். இதற்கிடையே மனம் உடைந்த சிறுமியின் தாயார், அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு மங்கலத்தை அடுத்த பூமலூரை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி பாலமுருகன் (34 வயது) வந்தார். அவர், சிறுமிக்கு ஆறுதல் வார்த்தை கூறுவது போல் ஏமாற்றி, தேநீரில் மயக்க மருந்து கொடுத்துள்ளார். அதனை குடித்ததும் மயங்கி விழுந்த சிறுமியை அவர் தனது வீட்டுக்கு தூக்கி சென்றார். அதன்பின்னர் என்ன நடந்தது என்று சிறுமிக்கு தெரியவில்லை. பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமிக்கு மறுநாள் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

இதுகுறித்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த தாயாரிடம் சிறுமி தெரிவித்தார். உடனே அவர் சிறுமியை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், திருப்பூர் கே.வி.ஆர்.நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு வந்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, பாலமுருகன் கொடுத்த நேநீரை அருந்தியதும் தனக்கு தலை சுற்றல் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் தன்னை அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை என்றும் கூறினார்.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலமுருகனை கைது செய்தனர். 13 வயது சிறுமிக்கு தேநீரில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்