தோழியின் திருமணத்திற்கு வர மறுத்த கணவர்... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் கோகுல் (26 வயது). இவரது மனைவி சவுந்தர்யா (24 வயது), இருவரும் காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நேற்று முன்தினம் இரவு கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவிரக்தி அடைந்த சவுந்தர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வளசரவாக்கம் போலீசார் இறந்து போன சவுந்தர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சவுந்தர்யா தனது தோழி திருமண நிகழ்ச்சிக்கு தன்னுடன் வரவேண்டும் என கணவரை அழைத்ததாக கூறப்படுகிறது. கோகுல் செல்ல மறுத்ததால் சவுந்தர்யா தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.