புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் செங்கோட்டையனுடன் ஆலோசனை நடத்திய விஜய்
சட்டமன்ற தேர்தல் பணிகளை தவெக முடுக்கிவிட்டுள்ளது.;
சென்னை,
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. எனவே அடுத்த சட்டசபைக்கான தேர்தலை அடுத்த ஆண்டு (2026) மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது.
இது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சிகள், முழுவீச்சில் தேர்தலுக்கான பணியை தொடங்கி இருக்கின்றன. தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளின் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என நான்கு முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பணிகளை தவெக முடுக்கிவிட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் நேற்று ஆலோனை கூட்டம் நடைபெற்றது. இதில், தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரிவு மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து கட்சியின் தினசரி பணிகளை கவனித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்காக தனியான குழு அமைப்பது குறித்தும், அந்த குழுவில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பது குறித்தும் தலைமை நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். அதேபோல், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டணி பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களின் தேவைகள், மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்பதில் விஜய் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.