ராமேஸ்வரம் பாக் ஜலசந்தி கடலில் இறந்து கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்: மீனவர்கள் அச்சம்
மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
ராமநாதபுரம்,
ராமேஸ்வரம் கடலில் திடீரென நூற்றுக்கணக்கான சொறி மீன் எனப்படும் ஜெல்லி மீன்கள், நேற்று முதல் கடற்கரையோரங்களில் இறந்து கரை ஒதுங்க துவங்கியுள்ளது. ஜெல்லி மீன்களில் பல வகைகள் உள்ளன. இது அகலம் 5 செ.மீ முதல் 3 அடி வரை இருக்கும். இதன் மொத்த உடற்பகுதியில் 5 சதவீதம் மட்டுமே திடப்பொருளாகும். மீதியனைத்தும் திரவப்பொருளான நீரால் இருக்கும்.
ராமேஸ்வரம் கடலில் தற்போது கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் மனிதர்களுக்கு உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும் வகையை சேர்ந்தது. சேராங்கோட்டை முதல் கோதண்டராமர் கோயில் எதிரே கடற்கரை வரை 5 கி.மீ நூரத்திற்கு நூற்றுக்கணக்கான ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி கிடக்கின்றன. இதனால் அப்பகுதி மீனவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் பலருக்கும் சொறி மீன் கடித்து அலர்ஜி ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், மீன் ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.