‘கமல்ஹாசன் எம்.பி. ஆகிவிட்டார்; அவரது தொண்டர்களின் நிலை என்ன..?’ - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்
சிலர் தங்கள் சுயநலத்திற்காக அரசியல் கட்சிகளை உருவாக்குகிறார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.;
மதுரை,
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“ஒரு சிலர் எந்த நோக்கமும் இல்லாமல் ஒரு கட்சியை மட்டும் தொடங்குகிறார்கள். ஆனால் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை. அரசியல் ரீதியாக ஏதாவது முன்னெடுப்புகளை மேற்கொண்டால், மக்களிடம் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
ஆனால் அவர்கள் தங்கள் சுயநலத்திற்காக கட்சிகளை உருவாக்குகிறார்கள். உதாரணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். பிறகு அவர் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து எம்.பி. ஆகிவிட்டார். இப்போது அவரை நம்பி வந்த தொண்டர்களின் நிலை என்ன? இதுபோன்ற அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.