வக்கீல் வீட்டில் நகை திருட்டு வழக்கு: கைது செய்யப்பட்ட த.வெ.க. பெண் நிர்வாகி
வக்கீல் வீட்டில் நகை திருடியதாக த.வெ.க. பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.;
நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 28). இவர் நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். விளவங்கோடு செருவாலூர் பகுதியை சேர்ந்த அர்ஷிதா டிப்னி (23) என்ற சட்டக்கல்லூரி மாணவி கோர்ட்டுக்கு பயிற்சிக்காக வந்த போது விஜயகுமாருடன் அறிமுகம் ஆகியுள்ளது. மேலும் அந்த பெண் த.வெ.க.வில் நிர்வாகியாக உள்ளார்.
சம்பவத்தன்று விஜயகுமார் வீட்டில் இருந்த போது, அர்ஷிதா டிப்னி அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதாவது, உங்களுடைய வீட்டு அருகே நிற்பதாகவும், தனக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் உடனடியாக கழிவறை செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய விஜயகுமார், அர்ஷிதா டிப்னியை தன்னுடைய வீட்டுக்கு வரும்படி அழைத்தார். பிறகு வீட்டுக்கு வந்த அவரை கழிவறைக்கு அனுப்பினார். அந்த சமயத்தில் விஜயகுமார் வீட்டுக்கு வெளியே நின்றபடி தனது நண்பருடன் செல்போனில் பேசியபடி இருந்தார். சுமார் 10 நிமிடம் கழித்து கழிவறையில் இருந்து வெளியே வந்த அர்ஷிதா டிப்னி, விஜயகுமாரிடம் கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.
பின்னர் 2 நாட்களுக்கு பிறகு வீட்டு பீரோவில் இருந்த நகை, கம்மல், மோதிரம் உள்பட 90 கிராம் தங்க நகை காணாததை கண்டு விஜயகுமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். அர்ஷிதா டிப்னி வீட்டுக்கு வந்து சென்ற பிறகு யாரும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவர் மீது விஜயகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து அந்த பெண்ணிடம் அவர் விசாரித்த போது, சரியான பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து விஜயகுமார் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு அர்ஷிதா டிப்னியை போலீசார் கைது செய்தனர்.