நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக கையாளவில்லை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
பாஜக கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு வெளியேறவில்லை என டிடிவி தினகரன் கூறினார்.;
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து அவர் மனம் திறந்து பேசியதாவது;
மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தோம். நாடாளுமன்ற தேர்தல் வேறு; சட்டமன்ற தேர்தல் வேறு; நான் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பாஜக எப்படி சொல்லும்? கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பாஜக காரணம் இல்லை. தொண்டர்களின் முடிவு காரணமாக வெளியேறினோம். பாஜக கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு வெளியேறவில்லை. நிதானமாக எடுத்த முடிவு.
தேசிய ஜனநயாக கூட்டணியை அண்ணாமலை நல்ல முறையில் கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை. பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்காத விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் பதில் ஆணவமிக்கது. பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேறியதற்கு நயினாரின் செயல்பாடுகளே காரணம். அமமுக வேண்டுமா, வேண்டாமா என அதிமுக, பாஜக முடிவு எடுக்கட்டும்.
அதிமுக ஒன்றிணைய செங்கோட்டையன் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துகள். கெடுவுக்கு பின் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். எடப்பாடி பழனிசாமி மாறுவார் அல்லது திருத்தப்படுவார் என 4 மாதங்கள் காத்திருந்தோம். ஆனால் அவர் மாறுவதாக தெரியவில்லை.
சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் கூட்டணியில் அமமுக இருக்கும். தேர்தலில் எங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் முடிவெடுப்போம். அரசியலில் எதுவும் நடக்கும். புதிய கூட்டணி உருவாகும்."
இவ்வாறு அவர் பேசினார்.