கனமழை: நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.;
கோப்புப்படம்
நெல்லை,
நேற்று முன்தினம் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இரவிலும் மழை நீடித்தது. நெல்லையில் பரவலாக 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனமழை காரணமாக நெல்லையில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இதையடுத்து நெல்லையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தில் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் தெரிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.