காப்பகத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் சிறை
பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
திருப்பூர்,
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (வயது 50). பாதிரியாரான இவர், அப்பகுதியில் ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கான காப்பகம் நடத்தி வந்தார். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளை இந்த காப்பகத்தில் தங்க வைத்து அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்க வைத்தார்.
இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த காப்பகத்தில் தங்கி படித்த, 14 வயது சிறுமிக்கு ஆண்ட்ரூஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி உடல்நலக்குறைவால் வீட்டுக்கு சென்று, தனது தாயாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்ட்ரூசை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது காப்பகத்தில் தங்கி படித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார் ஆண்ட்ரூசுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகிலா தீர்ப்பளித்தார்.