மாநிலங்களவை தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
திமுக, அதிமுக, ம.நீ.ம வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.;
சென்னை,
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் 18 பேரில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வை சேர்ந்த வைகோ, அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க.வை சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.
அதனைத் தொடர்ந்து, புதிதாக 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக வரும் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. தி.மு.க. சார்பில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் கடந்த 6-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல், அ.தி.மு.க. தரப்பில் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். மேலும்,சுயேச்சைகள் 7 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து திமுக, அதிமுக, ம.நீ.ம வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளரின் பெயர் மற்றும் கட்சியின் பெயர்
1. ஐ.எஸ்.இன்பதுரை, அதிமுக,
2. கமல் ஹாசன், ம.நீ.ம
3. எஸ்.ஆர். சிவலிங்கம், திமுக
4. ம. தனபால், அதிமுக
5. ராஜாத்தி, திமுக,
6. பி. வில்சன், திமுக,