தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - மருத்துவ மாணவர் சேர்க்கை குழு எச்சரிக்கை
தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன.;
கோப்புப்படம்
மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 2 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. 2025-26-ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளன. வகுப்புகள் நேற்று முன்தினம் தொடங்கினாலும், கலந்தாய்வில் இடங்களை உறுதி செய்த மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.
அவ்வாறு சேரக்கூடிய மாணவ-மாணவிகளிடம் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் கேட்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கை குழு, அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி டீன், முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
* அனைத்து தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களும் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்களை தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகின்றன.
* 2025-26-ம் கல்வியாண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு, கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைத்தவிர அதிக கட்டணத்தைக் கோரினால், அரசாங்கத்தால் அந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாணவ-மாணவிகளிடம் இருந்தோ, பெற்றோரிடம் இருந்தோ இதுதொடர்பாக ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால், அந்தந்த நிறுவனம் மீது உரிய அதிகாரிகள் மூலம் அங்கீகாரத்தை திரும்பப் பெறுதல் அல்லது கல்லூரியின் இணைப்பை ரத்துசெய்தல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.