நடத்தையில் சந்தேகம்: மின்சாரம் பாய்ச்சி பெண் கொலை - கணவன் வெறிச்செயல்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை மின்சாரம் பாய்ச்சி கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2026-01-02 10:45 IST

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (43 வயது). இவரது மனைவி கலையரசி (33 வயது). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். மனைவி கலையரசியின் நடத்தையில் கருணாகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கலையரசி சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு பிறகும் மனைவி தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை என்றும், எழுப்பி பார்த்தும் அசைவின்றி கிடப்பதாக அவரது தந்தைக்கு கருணாகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சென்று பார்த்தபோது கலையரசி இறந்திருப்பது தெரியவந்தது. மகள் திடீரென இறந்ததில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கலையரசியின் பெற்றோர் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கருணாகரன், அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார். நள்ளிரவில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த கலையரசியின் கை மற்றும் கால்களில் ஒயரால் மின்சாரத்தை பாய்ச்சி கொன்று விட்டு, காலையில் உடல் நலக்குறைவால் மனைவி இறந்ததாக அவரது பெற்றோரிடம் நாடகமாடியதாக கருணாகரன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்