தமிழக சட்டசபை அக்டோபர் 14-ந்தேதி கூடுகிறது - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.;

Update:2025-09-23 11:49 IST

சென்னை,

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 6-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என். ரவி, தனது உரையை வாசிக்காமல் சென்றுவிட்டார். தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்றது.

அதன்பிறகு, மார்ச் 14-ந்தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் (மார்ச் 15) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதனை தொடர்ந்து, மார்ச் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை இரு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.

அதன்பின்னர், மார்ச் 24-ந்தேதி முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மொத்தம் 55 துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி மழைக்கால கூட்டத்தொடராக இது நடக்கிறது.

இது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் மு.அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:- சட்டப்பேரவை விதி 24 (1)-ன் கீழ் சட்டசபை கூட்டம் அக்டோபர் 14-ந்தேதி காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது. அன்றைய தினம் முன்னாள் எம்.எல்.ஏ. 8 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது. மேலும், வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், 2025-2026-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்திற்கான நிதி அனுமதியளிக்கப்படும். எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும் என்பது குறித்து அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்