தஞ்சை: கடந்த 3 மாதங்களில் ஆற்றில் மூழ்கி 37 பேர் சாவு
கடந்த 3 மாதங்களில் ஆற்றில் மூழ்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாவட்ட தீயணைப்பு அதிகாரி குமார் தெரிவித்துள்ளார்.;
தஞ்சாவூர்,
இது குறித்து தஞ்சாவூர் தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை மாவட்ட அலுவலர் குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாய பாசனத்திற்கு மற்றும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காகவும் கடந்த ஜூன் 12 -ந் தேதி மேட்டுர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் ஆற்றில் மூழ்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரியவர்கள் 28 பேர், ஒரு குழந்தை, பள்ளி மாணவர்கள் 3 பேர், கல்லூரி மாணவர்கள் 5 பேர் என மொத்தம் 37 பேர் அடங்குவர்.
பெரும்பாலும் நீர்நிலைகளில் நீச்சல் தெரியாதவர்கள் கவனக் குறைவாக ஆழமானபகுதிக்கு சென்று நீரில் முழ்கும் நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் திடீர் மழை மற்றும் அணை திறப்பு காரணமாக நீர் மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் முழ்கும் அபாயமும் உள்ளது. நீச்சல் தெரிந்திருந்தாலும், ஆறுகள், கால்வாய்கள் போன்ற இடங்களில் வேகமான நீர் ஓட்டம், சுழல் ஓட்டம் ஆகியவற்றில் சிக்கி மனிதர்கள் உயிரிழக்கிறார்கள்.
நீர்நிலைகளில் செல்பி எடுப்பது, நண்பர்களுடன் ஆற்றின் கரைகளில் விளையாடுவது மற்றும் செல்லப்பிராணிகளை குளிக்க வைப்பது போன்ற செயல்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எனவே, மதிப்புமிக்க மனித உயிர்களின் அவசியம் கருதி ஒவ்வொருவரும் தமது குடும்பம் மற்றும் சமுதாய பொறுப்பை உணர்ந்து நீர்நிலைகளுக்கு தேவையில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.