தமிழக கிராமங்களில் மக்களுடைய நிலைமை மிக மோசமாக உள்ளது: கிருஷ்ணசாமி பேட்டி

தமிழகம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததாக சொல்கிறார்கள்; கிராமங்களில் ஒரு சதவீதம் கூட பிரதிபலிக்கிற மாதிரி தெரியவில்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.;

Update:2025-08-09 08:21 IST

தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

"சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் இன்று மிகப்பெரிய அளவிற்கு காவல்துறை இருக்கிறதா இல்லையா அல்லது ஒரு ஆட்சி இருக்கிறதா இல்லையா என்று கேள்வி கேட்கிற நிலையில் ஒரு அவலமான நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் யாரும் யார் கட்டுப்பாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை. மாவட்ட ஆட்சியரை யார் கட்டுப்படுத்துகிறார்கள், தாசில்தாரை யார் கட்டுப்படுத்துகிறார்கள், எஸ்பியை யார் கட்டுப்படுத்துகிறார்கள், இன்ஸ்பெக்டரை யார் கட்டுப்படுத்துகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் கட்டுப்பாடு இல்லாமல் சொல்லப்போனால் ஒரு காலத்தில் இந்தியா இப்படித்தான் இருந்தது.

ஒரு அரசே இல்லாமல் இருந்தால் எப்படிப்பட்ட சூழ்நிலை நிலவுமோ அதேபோன்ற நிலைமை தான் தற்போது தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் ஒரு அரசாங்கம் இருக்கிறதா என கேள்வி எழுப்பக்கூடிய அளவில் மேலிருந்து கீழ் வரை எந்தவித தொடர்புகளும் இல்லாமல், அவர் அவருக்கு முடிந்த அளவு வாரிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆட்சி முடியப்போகிறது என்ற எண்ணத்தோடு செய்கிறார்களா அல்லது வேறு எண்ணத்தோடு செய்கிறார்களா என்று தெரியவில்லை. அதனால் ஒரு கட்டுப்படாத தன்மையை பார்க்க முடிகிறது மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது.

தமிழகம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததாக சொல்கிறார்கள்; கிராமங்களில் ஒரு சதவீதம் கூட பிரதிபலிக்கிற மாதிரி தெரியவில்லை. எதை ஆதாரமாக வைத்து சொல்லப்படுகிறது என்று தெரியவில்லை. கிராமங்களில் மக்களுடைய நிலைமை மிக மோசமாக உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 11.8 சதவீதம் வளர்ச்சி என்று கூறுகிறார்கள் ஆனால் அது பிரதிபலிப்பதாக தெரியவில்லை.

தேர்வு முறைகளை ரத்து பண்ணுவது என்பது தமிழகம் கல்வியில் கீழே போவதற்கு காரணமாகும். தேர்வு முறைகள் இல்லையென்றால் மாணவர்களின் கல்வித் தரம் உயராது. தொழில் நிறுவனங்களில் உள்ளூர்வாசிகளுக்கு தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று கூறினாலே வெளி மாநிலத்தவர்கள் இங்கே வேலைக்கு வரும் பிரச்சினை முடிந்துவிட்டது. முதலில் முன்னுரிமையில் இங்கு பாகுபாடு பார்க்காமல் வரக்கூடிய தொழிற்சாலைகளில் எத்தனை சதவீதம் உள்ளூர்வாசிகளை எடுத்துள்ளீர்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளூர்வாசிகளை வேலைக்கு அமர்த்தி உள்ளீர்களா என கேள்வி கேட்டாலே எல்லா பிரச்சினையும் முடிவுக்கு வந்துவிடும். வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையில் உள்ளூர்வாசிகள் எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவில்லை என புகார் வருகிறது. முக்கியமான பதவிகளில் வெளி மாநிலத்தவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஸ்கில்டு தொழிலாளர்களாக இங்கே உள்ளவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

பல்வேறு நிறுவனங்கள் கண்காணிகளாக தமிழர்களை வைத்து தமிழர்களை காலி செய்வார்கள். நமது நாட்டில் பொன்னை காட்டிலும் மதிப்பு மிக்க நிலத்தை கொண்டு போய் தேவையில்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறார்கள். அத்தனை நிலங்களும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துவது இல்லை. இது ஒரு நில அபகரிப்பு தான். உப்பள தொழில் தான் தங்களது வாழ்வாதாரம் என்று இருப்பவர்களை பாதிக்கக்கூடிய வகையில், வயிற்றில் அடித்துவிட்டு 2000 ஏக்கர் நிலம் எடுப்பது நியாயமாக தென்படவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒட்டுமொத்தமாக தேவையானதாக உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கக் கூடிய வகையில் அனைத்து மட்டங்களிலும் இட ஒதுக்கீட்டை அமலாக்கக் கூடிய வகையில் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.  

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்