திருச்செந்தூர்: வீட்டுப்பாடம் எழுதாததை ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவன்

வீட்டுப்பாடம் எழுதாமல் வந்ததை ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் மாடியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்தான்.;

Update:2025-06-14 08:55 IST

கோப்புப்படம் 

திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பிரபாகர். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் (14 வயது). இவர் திருச்செந்தூர் - நாகர்கோவில் சாலையில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார். ஆகாஷ் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்பொழுது வீட்டுப்பாடம் எழுதாமல் வந்ததாக ஆசிரியை மாணவரை கண்டித்ததுடன், வகுப்பை விட்டு வெளியே நிற்க சொல்லி உள்ளார்.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி அந்த மாணவர் பள்ளியின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். மாணவரை ஆசிரியர்கள், மாணவர்கள் மீட்டனர். இதுகுறித்து பள்ளி முதல்வர் மாணவரின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு வந்த குடும்பத்தினர் மாணவரை திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவனுக்கு வலது கையிலும், இடுப்பிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் மாணவரை அழைத்து சென்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து பள்ளியில் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்