தூத்துக்குடி: அன்புக்கரங்கள் திட்டத்தில் 158 குழந்தைகளுக்கு மாதம் தோறும் ரூ.2,000 உதவித்தொகை
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டர் இளம்பகவத், பெற்றோர் இருவரையும் இழந்த மாணவ-மாணவியர்களுக்கு அன்புக்கரங்கள் திட்ட பயனாளி அட்டைகளை வழங்கினார்.;
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு அரசின் "தாயுமானவர்" திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் "அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் பெற்றோர் இருவரையும் இழந்து 12-ம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் முன்னிலையில் பெற்றோர் இருவரையும் இழந்த மாணவ- மாணவியர்களுக்கு பயனாளி அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒரு அங்கமான குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குநரகம், இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் கீழ் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் மறுவாழ்விற்காக நிறுவனம் மற்றும் நிறுவனம் சாரா சேவைகளை வழங்கி வருகிறது.
தமிழ்நாடு அரசின் "தாயுமானவர் திட்டம்" அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உலகளாவிய சகோதரத்துவம் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, "அன்புக்கரங்கள்" என்ற திட்டத்தின் மூலம் மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினை தொடர்ந்து, அன்புக்கரங்கள் திட்டத்தை செயல்படுத்த கைப்பேசி செயலி (Mobile App) உருவாக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட விவரங்கள், மக்கள் குறைத்தீர்க்கும் நாள், உங்களுடன் ஸ்டாலின் முகாம், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் பெறப்பட்ட விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 158 குழந்தைகள் தமிழ்நாடு அரசின் நிதி உதவியினை மாதம் தோறும் ரூ.2,000 பெற உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) சிதம்பரநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.