தூத்துக்குடி: லாட்டரி விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதாக ஏரல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.;

Update:2025-09-14 16:55 IST

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதாக ஏரல் போலீசாருக்கு சம்பவத்தன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி தலைமையிலான போலீசார் ஏரல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஏரலில் உள்ள ஒரு தியேட்டரின் பின்புறம் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். உடனடியாக போலீசார் அவர்களை மடக்கி பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள், ஏரல் மாடத்தெரு மாரியப்பன் மகன் ஜெயபிரகாஷ் (வயது 24), சாயர்புரம் பிஷப் தெருவை சேர்ந்த சாலமன்ராஜா மகன் விமல்ரித்திக்(19), சாயர்புரம் சுப்பிரமணியபுரம் செல்வம் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பெரியசாமி(19) என்பது தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் 3 பேரும் சாயர்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்