தூத்துக்குடி: தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை- விண்ணப்பிக்க ஜூன் 13 கடைசி நாள்
தொழிற்பயிற்சி நிலையங்களில் தகுதியுள்ள மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.;
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2025-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர், நாகலாபுரம் மற்றும் ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் www.skiltraining.in.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில், அரசு தொழிற்பயிற்சி நிலையம், தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர், நாகலாபுரம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள சேர்க்கை மையங்களின் பட்டியல் மற்றும் தொழிற்பிரிவுகள் விவரம் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு/10-ம் வகுப்பு/2021-ல் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் 9-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்.
விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50-ஐ Debit Card/Credit Card/Net Banking/G-Pay வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள்: 13.6.2025.
விண்ணப்பிக்க விரும்புவோர் 8-ம் வகுப்பு/ 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு நகல்களுடன் தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளத்திலுள்ள தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் (0461-2340133/9499055810), வேப்பலோடை (0461-2267300/9499055814), திருச்செந்தூர் (04639-242253/9499055812) மற்றும் நாகலாபுரம் (7373906100/9499055816) மற்றும் தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்திற்கு (0461-2340041) நேரில் வந்தும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, கட்டணமில்லா பஸ் பாஸ், இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்குத் தேவையான விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுவதாகவும், தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு இலவச உண்டி, உறைவிட வசதியும் உள்ளது எனவும், தகுதியுள்ள மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.