குடும்பத்தகராறில் விபரீதம்.. 2 மகள்களை கொன்று எலக்ட்ரீசியன் தற்கொலை
மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் எலக்ட்ரீசியன் அந்த விபரீத முடிவை எடுத்தார்.;
மதுரை,
மதுரை ஆலங்குளம், முடக்கத்தான் பகுதியை சேர்ந்தவர் கோபிராஜ் (வயது 40), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி காயத்ரி. இவர்களது மகள்கள் யுவஸ்ரீ (10), கனிஷ்கா (5). சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் அந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்ற நிலையில் திடீரென்று கணவன், மனைவிக்கு இடையே சிறிய சண்டை ஏற்பட்டது.
இதனால் மனவருத்தம் அடைந்த காயத்ரி கோபித்து கொண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி சென்ற சோகத்தில் கோபிராஜ், தனது மகள்களுடன் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு நீண்ட நேரம் கோபிராஜ் வீட்டின் கதவு திறக்காமல் இருப்பதை கண்டு அருகில் வசிப்பவர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அங்கு யுவஸ்ரீ, கனிஷ்கா ஆகியோர் பிணமாகவும், கோபிராஜ் தூக்கில் தொங்கியபடி பிணமாக இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்களது உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். விசாரணையில், மகள்கள் 2 பேரையும் கோபிராஜ் ஒயரால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.